வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் (எம்.எல்.சி.பி.) வசதி வருகின்ற டிசம்பர் 4 முதல் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் விளங்குகிறது. விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம் (NITB), இம்மாதத்தில் இருந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
மல்டி லெவல் கார் பார்க்கிங் தற்போதுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இது மொத்தம் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
"இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு ஒரு முக்கிய உள்கட்டமைப்பு ஊக்கமாக அமையும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
மல்டி லெவல் கார் பார்க்கிங் ஆனது விமான நிலைய மெட்ரோவின் இருபுறமும், கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பிளாக்குகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வாகன நிறுத்துமிடம் 2,150 கார்களுக்கு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆறு மாடிகள் கொண்ட இந்த அமைப்பில் இயந்திரமயமாக்கப்பட்ட பார்க்கிங் ஸ்லாட்டுகள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள், உணவகங்கள் மற்றும் பல வசதிகள் கொண்டுள்ளது.
மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைப்பதற்கு ஸ்கை வாக் போன்ற பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
கிழக்குத் தொகுதியில், பயனர்கள் மூன்றாம் தளத்திலிருந்து ஸ்கை வாக் பாலத்தை அணுகலாம் மற்றும் மேற்கில், இரண்டாவது மாடியிலிருந்து அணுகலாம்.
இரு சக்கர வாகனங்கள் ஒரு மணி நேரம் நிறுத்துவதற்கு 20 ரூபாயும், கார்களுக்கு 100 ரூபாயும், 16 இருக்கைகள் கொண்ட டெம்போ, பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு 300 ரூபாயும், 16 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி ஆனது வாலட் கார் பார்க்கிங் சேவையையும் வழங்குகிறது, இது தற்போதுள்ள மணிநேர கட்டணத்துடன் கூடுதலாக ரூ.150 இல் பெறலாம். ப்ரீ-பெய்டு டாக்சிகள் உள்ளிட்ட வணிக வாகனங்கள் பிக்-அப்களுக்கு ரூ.40 செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil