நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று முடக்கப்பட்டன.
இந்த நிலையில் சீமான், செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது புதிய ட்விட்டர் கணக்கில் சீமான், “கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீமானின் ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீமான் மட்டுமின்றி நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.
எனினும் இது தொடர்பான காரணங்கள் வெளியாகவில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“