அண்மை காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைக்கும் சீமானுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் "திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது!
ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை! பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம்.
நமது உயிர் மூச்சான தமிழ் ஈழத்தையும், தலைவர் மேதகுவையும், தமிழை ஆட்சி மொழியாக வழிபாட்டுமொழியாக வழக்காடு மொழியாக, ஏற்றுக் கொள்கிறார்கள், இந்துத்துவா வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள், இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள், தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்கிறார்கள்! இந்துத்துவாவாதிகள் திணிக்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் திணிக்கிறது, பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள். திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும், தமிழர்களையையும் அழித்து வந்தது ஆரியம் தான்.
நாம் தமிழர் கட்சியை துவக்கியதும், அன்றைக்கு அரவணைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிஸட்டுகள் தான். திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய,நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல, ஆரியம்தான் தமிழனின் முதல் பகை, அண்ணன் சீமானின் கருத்து ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங்கபரிவார் அமைப்புகளுக்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது,
'தமிழ் தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அக முரண்பாடுகளைத் தீர்த்து அதை சரியன அரசியல் பாதையில் அணி திரட்டக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பாவாதிகளின் நுனி நாவால் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராகவே அது இருக்குமாயின் எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படபோகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாதாகிவிடும்' ("தராக்கி சிவராம்" தலைவர் அவர்களால் "மா மனிதர் என்று பட்டம் சூட்டப்பட்டவர்)
அண்ணன் சீமான் அவர்கள் திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமால் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தை தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.