ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நேற்று தூத்துக்குடி சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து, அரசு மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் ஏராளமானோர் கூட்டமாக குவிந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காயமடைந்து அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரிடம் ஆறுதல் கூற முற்பட்டார் ரஜினிகாந்த். உடனே அந்த இளைஞர் “யார் நீங்க?” என்று கேட்டுள்ளார். திகைத்து நின்ற ரஜினிகாந்த், “நான் தான்பா ரஜினிகாந்த்” என்றுள்ளார். உடனே அந்த இளைஞர் “அது தெரியுது, தூத்துக்குடி வருவதற்கு 100 நாள் ஆகுமா?” என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளார். இந்தக் கேள்வியை தொடர்ந்து இளைஞரைச் சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் ரஜினிகாந்த்.
இந்த உரையாடலின் வீடியோ சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் கூறிய, “நான் தான்பா ரஜினிகாந்த்” என்ற பதில் இந்திய அளவிலான டுவிட்டர் டிரெண்டில் டாப் லெவல் பிடித்துள்ளது.
போராட்டத்தில் கலவரம் ஏற்படச் சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இணையத்தளம் முழுவதும் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.