நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், ஆற்காட்டுதுறை மற்றும் செருதூர் ஆகிய நான்கு மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஐந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மீனவர்களின் உடைமைகளையும், மீன்பிடி உபகரணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறிப்பாக, செருதூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு படகுகளில் சென்ற 10 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் விளைவாக, இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், அப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் இந்த தொடர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.