நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீ குளிக்க முயற்சி செய்த நபரை தடுத்து உயிரைக் காப்பாற்றிய செய்தித்தாள் புகைப்படக் கலைஞரை கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஆலங்கோட்டை கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது கோரிக்கையின் மீது மாவட்ட ஆட்சியரின் கவனத்தை திருப்பும் விதமாக திடீரென தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தீ குளிக்க முயற்சித்தார்.
அப்போது அங்கே செய்தி சேகரிக்க வந்திருந்த மாலை முரசு புகைப்பட கலைஞர் வின்னிங்ஸ் மணிகண்டன் அதிர்ச்சியடைந்து, உடனே விரைவாக செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற நபரை தட்டிவிட்டு அவருடைய உயிரைக் காப்பாற்றினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் விரைந்து வந்து பாலகிருஷ்ணன் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாத்தனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தினுள் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற பாலகிருஷ்ணனை மீட்ட காவல்துறையினர் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அவர் என்ன கோரிக்கைக்காக தீக்குளிக்க முயன்றார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்த்திற்குள் தீக்குளிக்க முயன்ற நபரை செய்தித்தாள் புகைப்படக் கலைஞர் காப்பாற்றிய சம்பவத்தை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரி நாராயணன், அந்த செய்தித்தாள் புகைப்பட கலைஞர் வின்னிங்ஸ் மணிகண்டன் நேரில் அழைத்து அவர்களைப் பாராட்டி சான்றிதழும் ஊக்கப்பரிசும் வழங்கி கௌரவித்துள்ளார். மேலும், நேசமணி நகர் எஸ்.பி.சிஐடி கிருஷ்ணகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர். அருணாசலம், முருகன் ஆகியோரையும் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”