'வேலை கிடைத்தால் உயிரைத் தருகிறேன்’ என கடவுளிடம் வேண்டிக்கொண்ட இளைஞர் ஒருவர் வேண்டுதலின்படி தனக்கு மும்பையில் வங்கி மேலாளர் வேலை கிடைத்ததும் ரயில் முன்பு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த நவீன் என்ற 32 வயது இளைஞர் தனது லட்சியமான வங்கி மேலாளர் வேலை கிடைத்தால் உயிரையே தருகிறேன் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டுள்ளார். அதன்படி, மும்பையில் வங்கி மேலாளர் வேலை கிடைத்ததும், தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்து சென்ற போலீசார், தற்கொலை செய்துகொண்ட நவீன் அணிந்திருந்த டி சர்ட்டில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், அவர் பல ஆண்டுகளாக அரசு வேலைக்கு கடுமையாக முயற்சித்து வந்ததாகவும் வேலை கிடைத்தால் கடவுளுக்கு உயிரைத் தருகிறேன் என்று வேண்டிகொண்டுள்ளார். வேண்டுதலின்படி, ‘கடவுளுக்கு வேண்டுதலை நிறைவேற்ற இறுதிக் கட்டத்துக்கு சென்று உயிரை காணிக்கை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்த செல்லசாமியின் மகன் நவீன் (32). பொறியியல் பட்டதாரியான நவீன் அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால், பல முறை ஏமாற்றம் அடைந்த நவீன், கடவுளிடம் தனக்கு எப்படியாவது அரசு வேலை கிடைத்தால் தனது உயிரையே தருகிறேன் என்று கடவுளிடம் மனம் உறுகி வேண்டிக்கொண்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், நவீன் வங்கித் தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு மும்பையில் ஒரு வங்கியில் மேலாளர் வேலை கிடைத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பை சென்று பணியில் சேர்ந்த நவீன், வெள்ளிக்கிழமை மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவணந்தபுரம் வந்துள்ளார். அங்கிருந்து சாலை வழியாக நாகர்கோயில் வந்த நவீன், வேண்டுதல்படி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற புத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு அவருடைய தலை துண்டாகி கொடூரமாக உயிரிழந்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நவீன் மரணம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இப்படி விபரீதமாக வேலை கிடைத்தால் உயிரைத் தருகிறேன் என்று வேண்டிக்கொண்ட இளைஞர் நவீன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருப்பது அவர்கள் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவின் சிறு வயதில் இருந்து மிகவும் கடவுள் பக்தி உள்ளவராக இருந்தார் என்று கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"