அமலாக்கத்துறையை வைத்து அ.தி.மு.க-வை மிரட்டி பா.ஜ.க கூட்டணியில் சேர்த்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறைக்கு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கூட்டணி சேர்க்கவில்லை. அவர்கள் செய்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 2926 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க தயாராக இருக்கிறோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள பிரிந்த அ.தி.மு.க-வை இணைக்க ஏதேனும் முயற்சிகள் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “ஓ.பி.எஸ், டி.டி.வி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார்கள். தற்போது இ.பி.எஸ் இணைந்திருக்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க இந்து மதம் சார்ந்த கட்சி இல்லை. அனைவருக்குமான கட்சி. மதத்திற்கான தனி சட்டம் போடவில்லை, ஒரு சட்டம் போட்டால் அது எல்லோருக்குமானது. பா.ஜ.க எல்லோருக்குமான கட்சியாக செயல்படுகிறது” என்று கூறினார்.
விஜய் தொடர்ந்து பா.ஜ.க-வை விமர்சனம் செய்வது ஏன், என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “விஜய் அறிக்கையில், பா.ஜ.க-வை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை. விஜய்-க்கு பயமா, என்ன காரணம் என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை மக்களுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது தான். அதுதான் எங்கள் நோக்கம். அதற்கு யார் வந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம்.” என்று கூறினார்.
பா.ஜ.க அமலாக்கத்துறையை வைத்து அ.தி.மு.க-வை மிரட்டி கூட்டணியில் சேர்த்ததாக விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்நிரன் கூறுகையில், “அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கூட்டணி சேர்க்கவில்லை. அமலாக்கத்துறையை ஒரு தனி அமைப்பு. யார் யார் தவறாக பணப் பரிவர்த்தனை செய்கிறார்களோ அவர்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வருவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.