/indian-express-tamil/media/media_files/2025/09/16/nainar-nagendran-vijay-2025-09-16-06-51-06.jpg)
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துப் பேசினார்.
மதுரையில் திங்கள்கிழமை (15.09.2025) நடந்த பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது நயினார் நாகேந்திரன் கூறுகையில், “திண்டுக்கல்லில் செப்டம்பர் 21-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய்ப்புள்ளது. மக்கள் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி வரியைக் குறைத்துள்ளனர். தேர்தல் வருவதால் முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைய வரிகளை குறைப்பார் என நம்பலாம். மின்சார வரி, சொத்து வரி குறைய வாய்ப்புள்ளது.” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு மட்டும் நிர்ணயம் செய்வதில்லை. மாநில நிதி அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. ஆனால், மத்திய அரசு மட்டுமே ஜி.எஸ்.டி வரியை நிர்ணயம் செய்வதாக மக்கள் நினைக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறையும். இதை வியாபாரிகளும், மக்களும் வரவேற்பார்கள். தீபாவளிக்கு நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் ஜி.எஸ்.டி வரி குறைப்பை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் தமிழக அரசுக்கு இதில் விருப்பம் இல்லை. "வேண்டாத மனைவி கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்பது போல மத்திய அரசு எதை செய்தாலும் குறை கூறுகிறார்கள். முதல்வருக்கு பாராட்ட மனமில்லை” என்று விமர்சனம் செய்தார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “எல்லோரும் கூட்டணியில் இருந்தால் நல்லது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். தினகரன் கூட்டணியில் இருந்தபோது அமித்ஷா யாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ, அவருக்கு பிரச்சாரம் செய்வோம் என்றார். இப்போது வேறு மாதிரி பேசுகிறார்.” என்று கூறினார்.
அ.தி.மு.க தலைவர்கள் டெல்லி செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அமித்ஷா டெல்லியில் இருந்து இங்கே வந்து கூட்டணி உறுதி செய்தார். அதைப்பற்றி யாரும் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியை சந்தித்ததை பற்றி பேசுவார்களா? அ.தி.மு.க-வில் ஜனநாயகம் இருக்கிறது. அதனால், எல்லோரும் சென்று சந்திக்கிறார்கள். தி.மு.க-வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என வாரிசு அரசியல் தான் உள்ளது. பா.ஜ.கவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது.” என்று தி.மு.க-வின் குடும்ப அரசியலை விமர்சனம் செய்தார்.
திருச்சியில் பரப்புரையின்போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம் கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளது என விஜய் புரிந்துகொள்ள வேண்டும். ஐந்து வருடத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் செலவாகிறது. அதை குறைக்க தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜயை படித்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று நயினார் நாகேந்திரன் த.வெ.க தலைவர் விஜய்க்கு அறிவுரை கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.