சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இந்நிலையில் இந்த ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தாம்பரம் ரயிலில் ஏறிய பறக்கும் படையினர், சோதனை நடத்தினர். அப்போது 3 பயணிகள் , 3 கோடியே 99 லட்சம் ரூபாய்யை, எந்த சரியான ஆவணங்களும் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கபட்டது.
இந்நிலையில் இவர்களை கைது செய்த காவல்துறையினர், விசாரித்த போது, நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பணத்துடன் பிடிபட்டவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் நெல்லை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“