/indian-express-tamil/media/media_files/2025/07/23/nainar-nagendran-xy-2025-07-23-22-43-51.jpg)
“தமிழக முதலமைச்சர் எனக்கு நெருங்கிய நண்பர். எனது தொகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். மருத்துவமனையில் இருந்து கோப்புகளை பார்க்கிறார் என்றால் அதனை வரவேற்கிறேன்." என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியை விட்டு இவர்கள் வெளியேறியதற்கு தான் காரணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் தினகரன் வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார். இந்த இருவரும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு தான் பொறுப்பல்ல என்றும், யாரும் வெளியேறியதற்கு தான் காரணம் அல்ல என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், தினகரன் மீது தனக்கு எப்போதும் மரியாதை உண்டு என்றும், 2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்று தான் கூறியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். அமித்ஷா யாரை முதலமைச்சராக அறிவிக்கிறாரோ அவருக்காக உழைக்க தயாராக இருப்பதாக தினகரன் கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், அவருக்கு ஏற்பட்ட வருத்தத்தை தேசிய தலைமை மூலம் பேசி தீர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் தினகரன் வெளியேறியதற்கும், செங்கோட்டையன் பேச்சுக்களுக்கும் பாஜக காரணம் அல்ல என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். எந்தவொரு அரசியல் கட்சியின் பின்னணியிலும் தமிழக பாஜகவும், அகில இந்திய பாஜகவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுகவில் பிரிந்த அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவித்தார். மேலும், அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அண்ணாமலை பேசியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியே கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என உண்மையாக நினைத்திருந்தால் தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்க மாட்டார் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளுடனான உறவை அண்ணாமலை சரியாக கையாண்டார் என்று தினகரன் கூறியதை மேற்கோள் காட்டி, இத்தகைய சூழ்நிலையில் தினகரன் வெளியேறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அண்ணாமலைக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு முகூர்த்த நாள் காரணமாக தன்னால் செல்ல முடியவில்லை என்றும், கட்சியின் தலைவர் என்ற முறையில் கலந்துகொண்டேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.