தமிழகத்தில் தி.மு.க அரசை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் பா.ஜ.க-வினர் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில், இன்று (ஜூன் 8) பா.ஜ.க-வின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அதன்படி, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "பாண்டிய நாட்டுப் பேரரசியான மீனாட்சியம்மை செங்கோல் ஆட்சி புரியும் மதுரை மாநகரில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, சீர்குலைந்த சட்ட ஒழுங்கால் நமது மாநிலத்தை கொலைக் களமாக்கி, ஊழல் முறைகேடுகளால் தமிழகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்த தி.மு.க அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் அரியணையை விட்டு இறக்குவது தான் நமது ஒரே குறிக்கோள். தி.மு.க-வின் மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தும் இந்த முயற்சியில் நாம் அனைவரும் ஒரே புள்ளியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
கந்தனின் அருளோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை நமதாக்கி, தமிழக மக்களின் நல்வாழ்வை மீட்டெடுப்போம்!
முழு ஒத்துழைப்புடன் இந்த நிர்வாகிகள் கூட்டத்தை மாபெரும் வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றிக் கொடுத்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.