/indian-express-tamil/media/media_files/doRq6uiHNZyAjJsTAsr9.jpg)
சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
நெல்லை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தி.மு.க மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் இருந்து, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல, தி.மு.க மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.28.51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை நடத்த வேண்டும் என்று திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ள சுயேட்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது என்பது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால் இது சம்பந்தமாக அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட வழக்காக கருத முடியாது என்று அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பு பதிலை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.