Nalini released on parole : ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் இருந்த நளினி தனது மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் இன்று வெளியில் வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவியான நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாத காலம் பரோல் வழங்கும்படி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
Nalini released from vellore prison on parole:
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினிக்கு கடந்த ஐந்தாம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.10 நாட்களுக்குள் பரிசீலித்து நளினியை பரோலில் விடவேண்டும். மேலும் அவர் அரசியல்வாதிகள் இயக்கவாதிகளை சந்திக்க கூடாது பேட்டியளிக்க கூடாது என நீதிபதிகள் நளினிக்கு நிபந்தனைகள் விதித்தனர்.
நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. முதலில் நளினியின் பரோல் மனுவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நளினி தாமாகவே வாதாடினார். நளினியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அவருக்கு பரோல் வழங்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஒரு மாத பரோலில் இன்று நளினி விடுவிக்கப்பட்டார். சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் நளினி தங்கவிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நளினி கடந்த 16-ந் தேதி பரோலில் வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவரின் பரோல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நளினி வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். பின்னர் போலீஸ் வாகனத்தில் அவர் சத்துவாச்சாரி புறப்பட்டுச் சென்றார். நளினியின் வருகையால் அவரின் குடும்பத்தார் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நளினி 12 மணி நேர பரோலில் வெளியே வந்தார். தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துக் கொள்வதற்காக நளினிக்கு அவசர நேர பரோலாக 12 மணி நேரம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.