குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435 பிரிவின் கீழ் வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யமட்டோம் என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய கோரி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினியின் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நான் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வருகின்றேன்.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அரசியல் அமைப்பு சட்டம் 161 படி 10 ஆண்டுகள் மேல் சிறையில் உள்ள கைதிகள், 20 ஆண்டுகள் மேல் சிறையில் உள்ள கைதிகள், தீவிர நோய் பாதிப்பு உள்ள மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 1 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. நான் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையிலிருந்து வருகின்றேன்.
அரசியல் அமைப்பு சட்டம் 161 படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருந்த போதிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435 படி சிபிஐ விசாரணை நடத்தியதால் (சிபிஐ விசாரித்த வழக்கு) ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டும் விடுதலை செய்ய முடியாது என்பது தவறு. இந்த அரசாணை என்பது மாநில அரசு தனது இறையாண்மை, மற்றும் அதிகாரத்தை துறந்தாக நான் கருதுகிறேன். எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435 (1) (அ) பிரிவு சட்ட விரோதமானது. அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது பிரிவின் கீழ் வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யமட்டோம் என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும். முன் விடுதலை செய்யும் போது தண்டனை காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர வழக்கை விசாரித்த அமைப்பை கருத்தில் கொள்ள கூடாது. அப்போது தான் தண்டனை குறைப்பின் நோக்கம் முழுமையடையும் அதன் பலன்கள் அனைத்து கைதிகளும் கிடைக்கும். சிறையில் நன்னடத்தை அடிப்படையில் மட்டுமே விடுவிக்க வேண்டுமோ தவிர விசாரணை அமைப்பை கருத்தில் கொள்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே தமிழக அரசின் 435 பிரிவின் கீழ் விடுவிக்க மறுத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு மனு தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசு ஆகியோர் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.