ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ராப்பத்து விழாவின் 8-ம் நாளான இன்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி வகையறா கண்டருளினார்.
அப்போது மணல்வெளியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்க மன்னா, ரங்க மன்னா, கோவிந்தா கோவிந்தா என்று பக்திப்பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ராப்பத்து விழா
ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் ஶ்ரீநம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவம் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சியும் இன்று வேடுபறியும் நடைபெற்றது.
திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை எல்லாம் இழந்த திருமங்கை மன்னன் தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வேண்டும் என்பதற்காக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தாகவும், அவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ‘ஓம்நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்டதே இந்த வேடுபறி திருவிழா என அழைக்கப்படுகிறது.
கடந்த 7 நாட்களில் இராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் ஶ்ரீநம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். ஶ்ரீநம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் அன்று மட்டும் சுமார் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் ரங்கநாதரை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/