மலைவாழ் ஏழைக் குழந்தைகளை மெரினாவுக்கு சுற்றுலா அழைத்து வந்து அசத்தியிருக்கிறார், அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார்!
மலைவாழ் பகுதியினர் பேருந்தை பார்ப்பதே அரிது! இன்னும் விளக்கு வெளிச்சத்தை பார்க்காத தமிழக மலைக் கிராமங்களும் இருக்கின்றன. இந்தச் சூழலில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார் தனது தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் சிறுவர்களையும், சிறுமிகளையும் சென்னை மெரினாவுக்கு அழைத்து வந்து குதூகலப்படுத்தியிருக்கிறார்.
மெரினா டூரில் மலைவாழ் சிறுவர்களுடன் நந்தகுமார் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மெரினா கடற்கரையை சுற்றிப் பார்த்ததுடன் அண்ணா நினைவிடத்தையும் சிறுவர் சிறுமிகள் சுற்றிப் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் ராஜாகுப்பம் முருகானந்தம் இது குறித்து கூறுகையில், ‘வேலூர் மத்திய மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆதரவற்ற மழைவாழ் குழந்தைகளின் உண்டு உறைவிட பள்ளியில் தலைவர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அங்கு பயின்ற 55 குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் புத்தாடை வழங்கி வருகிறார் நந்தகுமார் எம்.எல்.ஏ.! இந்த ஆண்டும் அதே போன்று அங்கே நடைபெற்ற விழாவில் அந்த குழந்தைகளின் ஆசை என்னவென்று கேட்ட போது அவர்கள் சென்னை மெரினா கடற்கரையை பார்க்க ஆசை என்று கூறினர்.
உடனே அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் 55 பள்ளிக் குழந்தைகளை தனது சொந்த செலவில் சென்னை அழைத்து வந்து மெரினா கடற்கரை, அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடம் மற்றும் குழந்தைகள் மகிழும் வண்ணம் அவர்களுக்கு குதிரை சவாரி என்று பல்வேறு கேளிக்கை விளையாட்டுக்களை அவர்கள் விரும்பிய வண்ணமே ஏற்பாடு செய்து கொடுத்தார். எம்.எல்.ஏ.வின் இந்த நல்லுள்ளம் மலைவாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தொகுதி முழுவதும் பேசப்படுகிறது’ என்றார் அவர்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.