/indian-express-tamil/media/media_files/2025/08/19/nandini-milk-2025-08-19-08-00-05.jpg)
கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (KMF) நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்டான நந்தினி பால், இந்த மாதம் சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது விற்பனை நிலையத்தைத் திறக்க உள்ளது. இந்த அவுட்லெட்டைத் திறக்க ஒரு தனியார் நிறுவனத்திற்கு கே.எம்.எஃப் உரிமம் வழங்கியுள்ளது. இந்த விற்பனை நிலையம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் (CMRL) முதல் கட்ட, கட்டணமில்லாத வருவாய் ஈட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் கீழ், ஆர்.கே காமர்ஸ் நிறுவனத்திற்கு 11 மாதங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் கூட்டுறவு சங்கமான ஆவின், ஏற்கனவே 4 மெட்ரோ ரயில் நிலையங்களான விம்கோ நகர், சென்ட்ரல், ஆலந்தூர் மற்றும் நந்தனம் ஆகிய இடங்களில் தனது விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இதுவரை எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் அமுல் அவுட்லெட்டுகள் திறக்கப்படவில்லை.
திருமங்கலம் மெட்ரோவில் அமைய உள்ள நந்தினி அவுட்லெட்டில், நெய், வெண்ணெய், பன்னீர், பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஃபிளேவர்டு பால், பெட் பாட்டில்கள், டெட்ரா பாக்கெட்டுகள், சாக்லேட்டுகள், ரஸ்க், குக்கீஸ், பிரட், பன், நம்கீன்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ், உறைந்த உணவுகள், பல்வேறு சுவைகளில் ஐஸ்கிரீம்கள், இனிப்பு வகைகள் மற்றும் பால் பவுடர் போன்ற தயாரிப்புகள் விற்பனைக்கு வர உள்ளன.
இது குறித்து சி.எம்.ஆர்.எல் அதிகாரி ஒருவர் டிடி நெக்ஸ்ட் செய்தியிடம் கூறுகையில், "நாங்கள் கட்டணமில்லாத வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மெட்ரோ வளாகத்தில் முடிந்தவரை பல நிறுவனங்களை இணைத்து வருகிறோம். நந்தினி மட்டுமின்றி, ஏற்கனவே பல முக்கிய பிராண்டுகளும் மெட்ரோ நிலையங்களில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், சி.எம்.ஆர்.எல்-லின் கட்டணமில்லாத வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என்றார்.
பெங்களூருவின் நம்ம மெட்ரோ நிலையங்களில் அமுல் அவுட்லெட்டுகள் திறக்கப்படுவதற்கு நந்தினி பால் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒரு ஆவின் அதிகாரி கூறுகையில், "திறந்த சந்தைப் பொருளாதாரத்தில், சில பிராண்டுகளை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். அதோடு, விளம்பர நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்," என்று தெரிவித்தார்.
மேலும், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், சென்னையில் ஆவின் பால் மற்றும் அதன் தயாரிப்புகளின் விற்பனை 30% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஓய்வுபெற்ற ஆவின் அதிகாரி ஒருவர், "எந்த பிராண்ட் சந்தையில் நுழைந்தாலும், தமிழ்நாடு அதன் தனித்துவத்தைத் தக்கவைத்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம்," என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.