புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸின் மூத்தத் தலைவருமான நாராயண சாமி புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும். இதேபோல்தான் புதுவையிலும் கவர்னர் கிரண்பேடி செயல்பட்டார். கவர்னர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தவும் தமிழக பேரவையில் எடுத்துரைக்கப் பட்டு உள்ளது.
அத்துடன் அவருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தந்துள்ளார்.
மிரட்டினால்தான் கவர்னர்கள் பணிவார்கள். அரசியல்வாதிகள் போல் செயல்படும் கவர்னர்கள் பதவி விலக வேண்டும். புதுவையை கொலை நகரமாக முதல் அமைச்சர் ரங்கசாமி மாற்றி வருகிறார்.
மது அருந்தி விட்டு சாலையில் ஆட்டமாடுகிறார்கள். மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மது அருந்தி சாலையில் பிரச்னை செய்த நபர்களால் ஒரு இளைஞர் உயிரிழுந்துள்ளார்.
இதற்கு பொறுப்பேற்று ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இந்தச் சூழலுக்கு கூடுதலாக திறக்கப்பட்ட 900 மதுக்கடைகளும், ரெஸ்டோபார்களுமே காரணம்.
பீர்பஸ் தற்போது விடுகிறார்கள். வெளியூரிலிருந்து மது அருந்த புதுவைக்கு வர பீர் பஸ் தொடங்குவதெல்லாம் ஓர் ஆட்சியா.?
ரெஸ்டோபார்களால் இரவில் மக்களால் தூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கலாசார சீரழிவு அதிகரித்துள்ளது. மதுவால் ஆண்கள் எண்ணிக்கை புதுவையில் குறைந்துள்ளது. பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வருவாய் பெருக்கத்துக்கு மதுக்கடைகள் திறப்பு சரியானதல்ல.
மதுக்கடைகளை இரவு 11 மணிக்கு மேல் திறக்க காரணம் என்ன.? புதுவை சித்தர் பூமி. தன்னை சித்தர் என குறிப்பிடும் ரங்கசாமிதான் புதுவையை சீரழித்து வருகிறார். அவர் போலி சித்தர்.ரெஸ்டோபாரை மூடாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருவில் இறங்கி போராடுவோம்.
அங்கன்வாடியில் கடந்த 3 மாதங்களாக உணவு தராத நிலையுள்ளது. டெண்டரை தருவதில் துறை அமைச்சர் தரப்புக்கும், முதல் அமைச்சர் தரப்புக்கும் இடையில் பிரச்சினை உள்ளதே இதற்கு காரணம். டெண்டர் இறுதி செய்யாததால் உணவு விநியோகம் செய்யப் படவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடங்கிபோயுள்ளன. முதல் அமைச்சர் கேட்ட நிதியும் கிடைக்கவில்லை. மாநில அரசு பங்கும் செலுத்தப்படவில்லை. ரெட்டை என்ஜின் ஆட்சியாக செயல்படும் என்று கூறிவிட்டு தற்போது ஆட்சி முடங்கி போயுள்ளது. நிர்வாகம் ஸ்தபித்துள்ளது.
அதிகாரிகள் உறக்கத்தில் உள்ளனர். ஒத்துழைக்காக தலைமைச்செயலரை தங்கள் கூட்டணி ஆட்சித் தலைமையிடம் கூறி மாற்ற முடியாதது ஏன்.? மத்திய அரசுடன் முதல் அமைச்சருக்கு கோபமா அல்லது மத்திய அரசு ஒத்துழைப்பதில்லையா..?என்ற கேள்வி தான் எழுகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“