புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை ஏற்கும். அப்படி, தலைமை ஏற்காவிட்டால் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் மக்கள் குடியிருப்பு, கோவிலுக்கு அருகாமையில் மற்றும் பள்ளிக்கூட பகுதிகளில் மதுபான கடைகளை அனுமதிக்க கூடாது என்று சட்டம் இருந்தும்கூட அதை மீறி நூற்றுக்கணக்கான மதுபான கடைகளுக்கு விதிமுறைகளை மீறி குடியிருப்பு பகுதிகளில் திறக்க முதலமைச்சர் அனுமதி தந்திருக்கிறார்.
தடுக்கி விழுந்தால் புதுச்சேரியில் சாராயக்கடை என்ற நிலைமையை உருவாக்கியவர் ரங்கசாமி. புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் கையூட்டு பெற்று முதலமைச்சர் அலுவலகம் அனுமதி தந்திருக்கிறது. கலால் துறை ஊழலின் மொத்த உரைவிடமாக மாறிவிட்டது.
புதுச்சேரியில் இறந்த மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானைக்கு அதற்கு நானும் என் கட்சி சார்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினோம். அதேபோல் ஆயிரக்கணக்கான மக்களும் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். யானை உயிரிழந்தது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்தேன். லட்சுமி யானைக்கு அஞ்சலி செலுத்தாத முதலமைச்சர் புதுச்சேரி மாநில மக்களுக்கு அவ மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறார்.
பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானைக் கொண்டு வர வேண்டும். அதை மாநில அரசாங்கம் செய்ய வேண்டும்.
புதிய யானை வாங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறுகிறார். ஒரு அரசாங்கத்தால் மட்டும் தான் அனுமதி பெற்று புதிய யானை வாங்க முடியும். மக்களின் விருப்பம் விநாயகர் கோவிலுக்கு யானை வேண்டும் என்பது
எங்கள் கட்சி சார்பில் கேரள மாநிலம் முதலமைச்சரிடம் பேசி புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய யானை வாங்குவதற்கு அனுமதி வாங்கி தருவதற்கு முயற்சி மேற்கொள்வோம். புதுச்சேரி மக்களுடைய எண்ணத்திற்கு ஏற்ப முதலமைச்சர் ரங்கசாமி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
யானை இறந்த விகாரத்தில் விசாரணை வேண்டும் என்று நான் சொன்னதை அரசியல் என்று கூறுகிறார் தமிழிசை சௌந்தராஜன். அவர் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்ய வர வேண்டும் என கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்துகின்ற போராட்ட நிகழ்வுகளில்
காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொல்லுகின்ற போராட்டங்களை இணைந்து செயல்படுத்துகின்றோம்.
புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் என்று வந்தால் காங்கிரஸ் கட்சி தான் தலைமை ஏற்கும். சமீபத்தில் நடந்த இடஒதுக்கீட்டு போராட்டங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக அமைப்பாளர் சிவா தலைமை ஏற்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.
கூட்டணி தலைமை என்பது காங்கிரஸ் கட்சி தான். ஆனால் பத்திரிக்கை செய்திகளில் திமுக தலைமை ஏற்றதாக வந்தது. புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிக்கு காங்கிரஸ்தான் தலைமை ஏற்கும். அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"