மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.3300 மில்லியன் கன அடி கொள்ளளவை கொண்ட புழல் ஏரி 20.86 சதுர மைல் அளவிலான பரப்பளவு கொண்டது. புழல் ஏரி பகுதிகளில் கடந்த வாரம் சென்னை, புறநகர் பகுதி மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால், ஏரி நீர் விஷமாக மாறும் அபாயம் ஏற்பட்டு வருவதாக செய்தி வெளியானது.
பொதுப்பணி துறை பாராமரித்து வரும் புழல் ஏரியின் கரை செங்குன்றம், புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், முருகாம்பேடு, கள்ளிக்குப்பம், பானு நகர், வெங்கடேஸ்வரா நகர், திருமுல்லைவாயல், அரிக்கம்பேடு வரை நீண்டுள்ளது. கரையோரங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவதுடன், கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள், மரக்கழிவுகளும், மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இதுதொடர்பான செய்தியை பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வு தானாக முன்வந்த வழக்கு பதிவுப்செய்து இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பபி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரித்தபோது, மருத்துவ கழிவுகள் அகற்றப்ப்பட்டுவிட்டதாகவும், கழிவுகளை கொட்டிய நிறுவனத்தின் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளதாக தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாய நடுவர்கள், புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கழிவுகளை கொட்டுவதற்கு தடைவிதித்து வழக்கை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீட் இந்தியா அமைப்பின் செயலாளர் எம்.ஆர்.தியாகராஜனும் இணைந்து கொள்ள மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு பல மனுக்கள் கொடுத்ததாகவும், அதனடிப்படையில் வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற தீர்ப்பாயம் இணைப்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது.