தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை இன்று பார்வையிடுகிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஸ்டெர்லைட் ஆலை மூலமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகக் கூறி, ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.
ஸ்டெர்லைட் ஆலை ரசாயனங்கள் அகற்றம்
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த ரசாயனப் பொருட்களில் 90% அகற்றப்பட்டது. ஆனால் அங்கே இருக்கும் தாமிரத்தாது, ஜிப்சம், ராக்பாஸ்பேட் மற்றும் இதர ரசாயனப் பொருட்களை விரைவில் அகற்ற முற்பட்ட போது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதில் தலையிட்டது.
மேலும் படிக்க : ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும்
பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கும் குழு ஒன்றின் முன்னிலையில் தான் அந்த ரசாயனப் பொருட்களையெல்லாம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அக்குழு இன்று தூத்துக்குடி வர இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருப்பதால் தாமிரத்தாது தீப்பிடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆதலால் தாமிரத்தாதுவை அகற்றுவது குறித்து அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.