கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட மரணம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாரயம் குடித்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட மரக்காணம் அருகே எக்கியர் குபத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணைக்கை 13 தொட்டுள்ளது. மேலும் 40 மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்து கள்ளச் சாரயம் விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறுகையில் “ செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார். கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை. அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் “ காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பல இடங்களில் இருந்து கள்ளச் சாராயம் தொடர்பான புகார்கள் வந்தும், திமுகவில் உள்ள முக்கிய நபர்கள் இந்த வியாபாரத்திற்கு பின்னால் இருந்து செயல்படுவதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று கூறினார்.
மேலும் முந்தியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அவர் சந்தித்து , நிவாரண பொருட்களை வழங்கினார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநில அரசு இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.