பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் கசிந்ததற்கான காரணம் குறித்து தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் தகவலை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக எஃப்.ஐ.ஆர் நகல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எஃப்.ஐ.ஆர் நகலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
இந்நிலையில், மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது. அப்போது, நீதிபதி தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, எஃப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்தவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இருந்தும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, "தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் எஃப்.ஐ.ஆர் வெளியானது; காவல்துறை கசியவிடவில்லை" என அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் ராமன் விளக்கமளித்தார். மேலும், எஃப்.ஐ.ஆரை கசிய செய்த 14 பேருக்கு எதிராக விசாரணை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், எஃப்.ஐ.ஆர் எவ்வாறு கசிந்தது என தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "IPC குற்றவியல் சட்டத்தில் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் தான் எஃப்.ஐ.ஆர் வெளியானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், BNS சட்டத்தின் பிரிவுகளான 64, 67, 68, 70, 79 ஆகிய அனைத்துமே பெண்கள் வன்கொடுமை தொடர்பானவை என்றும், இந்த பிரிவுகளில் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் பட்சத்தில், புகாரளிப்பவர் மட்டுமே அந்த எஃப்.ஐ.ஆரை பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள, மாநில குற்றப்பத்திரிகை காப்பகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.