/indian-express-tamil/media/media_files/8CHSICoUYSaWo0dCFkXw.jpg)
ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தில், மங்கை திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்று என்.சி.பி அதிகாரி ஞானேஸ்வர்சிங் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் மங்கை திரைப்படம் போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவான என்.சி.பி அதிகாரி ஞானேஸ்வர்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து என்.சி.பி. அதிகாரி ஞானேஸ்வர்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம். திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டெல்லியில் கைது செய்தோம்.
ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டெல்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தி வந்தார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின்படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார்” என்று என்.சி.பி அதிகாரி கூறினார்.
மங்கை திரைப்படத்தை ஜாபர் சாதிக் நிறுவனத்தின் தயாரிப்பில் அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.