/indian-express-tamil/media/media_files/2025/05/05/B0KjBaD3XLdelgJoy47O.jpg)
நீட் தேர்வு எழுத இருந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார், இவரது மகள் கயல்விழி, 17. இவர், அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். கயல்விழி நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். தேர்வுக்கு படித்து வந்த கயல்விழி, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேல்மருவத்துார் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். நாடு முழுதும் நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில், நேற்று அதிகாலை மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலையில், கயல்விழியை எழுப்புவதற்காக, அறையின் கதவை திறந்த போது, மின்விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி வீட்டிலேயே முடங்கி கிடந்ததாகவும், சிறுமியின் தாயார் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியின் வீட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரப்பாக்கத்தில் 3 முறை நீட் தேர்வு எழுதிய 21 வயது தேவதர்ஷினி என்ற இளம்பெண், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.