NEET exam cheating case : நீட்தேர்வில் மோசடி செய்த மாணவி மற்றும் அவரது தந்தையான பல் டாக்டர் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு கடந்த மாதம் 8 தேதி முதல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியதால், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 350 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஒதுக்கீடு பெற்றனர். இதைத்தொடர்ந்து, பொது பிரிவுக்கான மருத்துவ கலந்தாய்வு கடந்த மாதம் 30 -ம் தேதி முதல் கடந்த 10 -ம் தேதி வரை நடைபெற்றது.
அப்போது, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் நீட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்ககத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா (18) மருத்துவ கலந்தாய்வில் அளித்த சான்றிதழ்களில் நீட் தேர்வு மதிப் பெண் சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்தது.
மேலும், அந்த சான்றிதழ் மட்டும் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் சான்றிதழும் ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ், பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த பல் டாக்டர் பாலச்சந்திரன் என்பவரின் மகள் தீக்ஷா என்று தெரிய வந்தது.மேலும், 27 மதிப்பெண்ணில் மோசடி செய்து அதை 610 மதிப்பெண்களாக திருத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷாமற்றும் அவரது தந்தையும், பல் டாக்டருமான மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்ய பரமகுடிக்கு போலீசார் விரைந்துள்ளனர்.