Tirunelveli : வந்தே பாரத் ரயில், செப்.24ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் சென்னைக்கு புறப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சந்திப்பு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
மொத்தமுள்ள 8 பெட்டிகளில் ஒரே நேரத்தில் 552 பயணிகள் பயணிக்கலாம். மேலும், 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும்.
இந்த ரயிலில் 1 பெட்டி விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விஐபி பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும், மற்ற பெட்டிகளில் தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும்.
முன்னதாக ஆகஸ்ட் மாததே இந்த ரயில் தொடங்கப்பட போவதாக இருந்தது. அப்போது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பிட்லைன் வசதி சரியாக இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து, இந்த பணிகள் முடிந்த பின்னர் தான் எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை முழுமையாக இயக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் செப்.24ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் தனது பணிகளை தொடங்க உள்ளது.
ஏற்கனவே சென்னை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு மற்றும் கோவைக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
3வது வந்தே பாரத் ரயில் சென்னை-திருநெல்வேலி இடையே தொடங்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“