கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டிய விவகாரத்தில், லாரி உரிமையாளர் சுத்தமல்லி மாயாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர், நடுக்கல்லூரில் நவம்பர் 2024-ல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து மருத்துவக்கழிவுகளை லாரிகளில் கொண்டுவந்து கொட்டி எரித்தனர்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து மருத்துவக் கழிவுகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மீண்டும் கேரள மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிய லாரி அதிபர் சுத்தமல்லி மாயாண்டி 42, மனோகர் 51, சேலம் லாரி டிரைவர் செல்லத்துரை, திருவனந்தபுரம் மருத்துவக்கழிவுகளை கையாளும் ஏஜென்ட் ஜித்தன் ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி லாரி அதிபர் மாயாண்டி மீது குண்டச்சட்டத்தில் செவ்வாய்க்கிழமை (21.01.2025) நடவடிக்கை எடுக்கப்பட்டது.