/indian-express-tamil/media/media_files/2025/04/16/5sdtldBzPJ9C8HxnEBt6.jpg)
நெல்லையில் திருமணமான சில மாதங்களில் இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சையாக கேட்பதாக மணமகள் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தனது கணவர் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சிப்பதாகவும் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது இருட்டுக்கடை. இந்த கடையின் உரிமையாளர் கவிதா சிங். கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கவிதா சிங்கின் மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 2 மாதங்களே ஆகும் நிலையில், மணமகன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைபடுத்துவதாக கவிதா சிங்கின் மகள், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகார் நெல்லை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங், "என் மகளுக்கு தாலி கட்டிய அடுத்த நொடியில் இருந்து பணத்திற்காகவும், வரதட்சணைக்காகவும் கொடுமைபடுத்தியுள்ளனர். எங்கள் கடையை அவர்கள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும் என்று கொடுமைபடுத்தி, உடல் ரீதியாக என்னுடைய மகளை துன்புறுத்தியுள்ளனர்.
என் மகளின் கணவர், ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது, இப்போது தான் தெரிய வந்தது. இது அனைத்தையும் மறைத்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியது மட்டுமின்றி மாப்பிள்ளை வீட்டார், பா.ஜ.க-வில் இருப்பதாகவும், தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் தான் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம்" கூறியிருந்தார்.
அதே சமயம், கவிதா சிங் மற்றும் அவரது மகள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள, பல்ராம் சிங் மற்றும் அவரது தந்தை யுவராஜ் சிங் ஆகியோர் "நாங்கள் எப்போதும் அவர்களுடன் சுமுகமாக போக வேண்டும் என்று தான் நினைத்தோம். இருட்டுக்கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள் தான் ஆகிறது. கடையே அவர்களுக்கு இப்போது தான் வந்திருக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை.
திருமணத்தின் போது அவர்களுடைய மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தார்கள் அதில் என்ன இருந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது. அவர்களின் மகள் சென்ற போது அதையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அந்தப் பெண்ணின் பெயரில் அன்பளிப்பாக கொடுத்த காரும் கூட அவர்களின் வீட்டிலேயே தான் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு முதலில் மூன்று இடங்களில் திருமணம் நிச்சயமாகி நின்று போய் விட்டது. இதுவும் திருமணம் நடந்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது" என கூறியிருந்தனர்.
இதனிடையே தற்போது, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங்கின் மகள், தனது கணவர் குறித்து மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே அவர் அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, பல்ராம் சிங்குக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி கோவையில் பல்ராம் சிங்கிற்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் அவரால் இன்றைய தினம் ஆஜராக முடியவில்லை என்று கூறி 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
மேலும், இந்த 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அழைத்தால் பல்ராம் சிங் ஆஜராக தயார் என்றும் தெரிவித்தை தொடர்ந்து வேறுவொரு தினத்தில் ஆஜராகமாறு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில’ தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கக்கோரி இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் மேலும் ஒரு புகார் மனுவை போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.