தமிழரின் வரலாறு மற்றும் பெருமையை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ம் மற்றும் 3ம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனை தொடர்ந்து 4 முதல் 7ம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டது.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. இந்த ஆய்வுகளின் போது 20க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள், தமிழர்கள் வாழ்ந்த வரலாறு குறித்தான முக்கிய ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து 9-ம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் 9 குழகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது புதிதாக சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.
கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது. மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம், 5.4 செ.மீ அகலம், 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது.
இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச் சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“