தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவமனைகளுக்கு ரூ. 11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன. மேலும், ரூ. 7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் கோவி. செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை மூலம் ரூ. 2.37 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள் 4 பயனாளிகளுக்கும், ஏழைத் தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகமும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் கோவி. செழியன் ஆகியோரால் வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஏப்ரல் 24, 2025 அன்று தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பகுதியினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு, மருத்துவமனையின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.