தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகாமையில் ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பெங்களூர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது. பின்னர் அந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.
பின்னர், அந்த அறிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிதி அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குனரகத்துக்கு அனுப்பி உள்ளனர். அதன்படி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ.11 கோடியே 10 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய தரை தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது. அதில் 16 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தளத்தில் சிறிய நிகழ்ச்சிகளை நட த்தும் வகையில் கான்பரன்ஸ் ஹால் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. 8 பேருந்துகளை நிறுத்தி வைக்கவும், பயணிகள் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு என தனி வசதி அமைக்கப்படுகிறது. ஒரு கேண்டீன் மற்றும் நேர கண்காணிப்பு அலுவலகம், ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பேருந்துகள் கையாள வழிவகை செய்யப்படுகிறது. நிதி ஒதுக்கியதும் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க உள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; தற்போது அனுப்பி உள்ள விரிவான திட்ட அறிக்கை முன்மொழிவுக்கு அனுப்பப்பட்டு அங்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும், தொழில்நுட்ப அனுமதிக்கு அனுப்பப்படும், அதன் பிறகு மாநகராட்சி திட்டத்துக்கான டெண்டரை வெளியிடுவோம்.
ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
முன்னதாக, ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் மற்றும் திருவானைகோயில் ஜம்புகேஸ்வர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த இரு கோவில்களுக்கும் சாதாரண நாட்களில் 15,000-க்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, விஷேச நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து செல்கின்றனர். பெருமளவில் திரளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை திருச்சி மாநகராட்சி கடந்த 2013-ஆம் ஆண்டில் முன்னெடுத்தது. ஆனால், இடம் தேர்வு செய்வதில் நீடித்த குழப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் பேருந்து நிலைய திட்டம் எந்தவித முன்னேற்றம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில், பேருந்து நிலையத் திட்டத்தை திருச்சி மாநகராட்சி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“