குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும், 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவெடுக்க உள்ளது. இந்த புயல் சின்னத்திற்கு 'ஒகி' என பெயரிடப்படலாம் என்று தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான 'தமிழ்நாடு வெதர்மேன்' தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், "குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு, 'ஒகி'(ockhi) என பெயரிடப்படலாம். குமரி அருகே மையம் கொண்டுள்ள புயல் சின்னத்தின் மைய பகுதியை ரேடாரில் காண முடிகிறது. இந்த புயல் சின்னம் கரை பகுதிக்கு வராது. கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடற்கரையோரமாக பயணிக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது காற்று வேகமாக வீசி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதியில் மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 'வர்தா' புயல் போல், இந்த புயல் சின்னம் கரை பகுதியை கடக்காது என்பது நல்ல செய்தி. இதனால் கடும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், மணிக்கு 65 - 75 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உண்டு. குமரிக் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
பொதுமக்கள் முடிந்த அளவு வீட்டிலேயே இருப்பது நல்லது. மரத்திற்கு கீழே நிற்க வேண்டாம். குறிப்பாக, ரப்பர் மரங்களுக்கு கீழே ஒதுங்க வேண்டாம். அவள் எளிதில் சாய்ந்துவிடும்" என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையமும் அதிகாரப்பூர்வமாக இந்த ஒகி புயலை உறுதி செய்துள்ளது.