தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளே இன்னும் மறையாத நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது காற்றழுத்த பகுதியாக மாறி வலுப்பெற்று தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே நவம்பர் 25ம் தேதி 11 மணி அளவில் அதிதீவிர புயலாக கரையைக் கடக்கத் தொடங்கி நவம்பர் 26ம் தேதி அதிகாலைக்குள் முழுவதுமாக கரையைக் கடந்தது. நிவர் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
நிவர் புயல் கரையக் கடக்கும்போது அதன் வெளிச்சுவர் கடலூரைத் தொட்டுவிடும் அளவுக்கு இருந்ததால் கடலூரில் காற்று பலமாக வீசியது. கனமழையும் பெய்தது. இதனால், கடலூரில் நெல், வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்தன. புயல் கரையைக் கடந்தபின், பல இடங்களில் ஆங்காங்காங்கே மரங்களையும் சாய்த்து சென்றது. பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாமல் நிவர் புயல் சென்றுவிட்டாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் சுவடுகள் அப்படியேதான் உள்ளது.
இந்த நிலையில்தான், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி வர வாய்ப்புள்ளது என்று சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் (நவம்பர் 30) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 2020 டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தப் பகுதி வலுப்பெறும்போது தென் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”