தமிழகத்திற்கு புதிதாக ஆளுநர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர். என். ரவியின் உரையோடு தொடங்கிய போது,கடும் எதிர்ப்புகள் நிலவியது. மேலும் ஆளுநர் உரையில் தமிழ்நாடு மற்றும் மற்ற வார்த்தைகள் நீக்கப்பட்டதை சுட்டிகாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தபோது, ஆளுநர் சட்டமன்றத்தைவிட்டு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் இதைத்தொடர்ந்து தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் ஒரு வித மோதல் போக்கு தொடங்கியது.
மேலும் ஆளுநரின் செயலை, திமுக கூட்டணி கட்சிகள் கண்டித்தது. ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜகவின் முகமாக ஆளுநர் செயல்படுகிறார் என்று விமர்சித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறும் என்று நம்புகிறோம் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் டெல்லிக்கு சென்று வந்த பின் சர்ச்சைக்குறிய வார்த்தைகள் பேசுவதில்லை என்றும் தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.