சென்னையில் புதிய விமான நிலையம் எடப்பாடி பழனிசாமி : கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றண்டு விழா நடைபெற்று வந்தது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவோடு, மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் பெற்ற பொன்விழா ஆண்டையும் சிறப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு அங்கமாக எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சென்னையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்புரையாற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசுகையில் தமிழகத்திற்கு அதிமுக அரசு செய்த சாதனைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு பேசினார் எடப்பாடி.
மேலும் புதிதாய் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் குறித்தும் பேசினார் முதல்வர். அப்போது கோயம்பேடு சந்தையின் பெயர் மாற்றம், ராமாவரம் தோட்டம் சுற்றி அமைந்துள்ள மவுண்ட் ரோடு - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம், மற்ற்றும் செண்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்தும் பேசினார்.
சென்னையில் புதிய விமான நிலையம் எடப்பாடி பழனிசாமி
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் மிக விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார். பயணிகளுக்கான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் தன்னிறவை அடையும் பொருட்டு புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது என்று அவர் கூறினார்.