தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மருத்துவமனையின் வசதிகள் கண்காணிக்கப்பட்டு, போலி மருத்துவர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தனர்.
நேற்று சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு, தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இருவரும்; மருத்துவமனைகளுக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றனர். மேலும் இச்சட்டத்தின் மூலம் மருத்துவமனைகளின் வசதி, மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனை குறித்த முழு விவரங்களும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் அரசின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினர். இதன் மூலம் போலி மருத்துவர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் என்றார்.
இந்தச் சட்டத்தின் அனைத்து விதிமுறைகளும் விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலம் அனைத்து மருத்துவமனையின் விவரங்களையும் ஆண்டுக்கு ஒருமுறை அரசு நாளிதழில் வெளியிடப்படும். ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று அமைச்சர் கூறினார்.
இறுதியாக, பொதுமக்களுக்குத் தரமான மருத்துவம் வழங்குவதே அரசின் நோக்கம். அந்த நோக்கத்தைச் செயல்படுத்தவே இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினர்.