Tamil Nadu News: போலி பத்திர ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளர்களுக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
வழக்கமாக, போலியான ஆவணங்களை பதிவு செய்து ஏமாற்றப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு முடியும் வரை காத்திருக்க நேரிட்டது.
ஆனால், தற்போது பதிவு துறை தலைவர் மற்றும் அதிகாரிகளே அந்த போலி ஆவணங்களை உறுதி செய்து, ரத்து செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்துள்ளார்.

போலி ஆவண பதிவினால் பாதிக்கப்பட்ட சொத்து உரிமையாளர்கள் 5 பேருக்கு நில அபகரிப்பால் ஆன மோசடி ஆவண பதிவை ரத்து செய்து அவர்களுக்கு உகுந்த உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதனால் போலி ஆவணபதிவுகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் போலி ஆவணங்களை பதிவு செய்வோர், அல்லது அதற்கு துணைபோவோர் ஆகியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 சார்பதிவாளர் அலுவலங்களில் உடனடி (தட்கல்) டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பதிவு துறைக்கு ஒருநாளில் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ஏற்பாடாக தட்கல் டோக்கன் வழங்கும் வசதி தற்போது முதலமைச்சரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை மங்களகரமான என்று கருதப்படும் நாட்களிலேயே பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக வேலைப்பளு உள்ள அலுவலங்களில் டோக்கன் கிடைப்பது சிரமமாகிறது. அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் பதிவர்கள் விரும்பினால் உடனடி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என்று இந்த வசதி அமல்படுத்தும் பொழுது குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், திருமணத்திற்கான சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பவர்கள், இணையவழியாகவே விண்ணப்பித்து திருத்தத்தை மேற்கொள்ளக்கூடிய வசதியையும் தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil