சென்னை வளசரவாக்கம் பகுதியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் சாக்கடையிலிருந்து ஆண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் பதபதைக்க செய்தது. பின்னர் அக்குழந்தையை அப்பகுதி மக்கள் மருத்தவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
கழிவுநீர் குழாயில் பச்சிளம் குழந்தை :
சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.பிஸ்.எஸ் நகர் 6ம் தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் குழாய் ஒன்றில் இருந்து பிறந்த குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் கழிவுநீர் குழாயில் இருந்து இரண்டு சிறிய கால்கள் தெரிவதை பார்த்தார். உடனே அந்த பெண் சிக்கியிருந்த குழந்தையை மீட்டார்.
முதலில் அந்த சிசு இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்திருக்க, வெளியே இழுக்கும்பொழுது அக்குழந்தை உயிருடன் இருந்தது சுற்றி இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாக்கடை குழாயில் சிக்கிக்கொண்டு இவ்வளவு நேரம் உயிரை தாக்குபிடித்திருந்ததை கண்டு அனைவரும் பிரமித்தனர்.
அதன் பிறகு அக்குழந்தையை மீட்ட அந்த பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் அந்த குழந்தையை நீரால் சுத்தம் செய்து சுதந்திர தினத்தில் கண்டெடுத்ததால் 'சுதந்திரம்' என்ற பெயர் சூட்டினர்.
பிறகு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இதனை வழக்காக பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.