தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மேலும் 4 ஆண்டுகள் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
1989 இல் ஆலையை நிறுவிய அரசு மின்வாரியமான Tangedco, தற்போதுள்ள ஆலையை விரிவாக்க அல்லது மாற்றுவதற்கு இரண்டு திட்டங்களை முன்வைத்தது. திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, Tangedco 2008 ல் ஒரு கருத்துக்கேட்பு நடத்தி சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது.
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க அலகுக்கு, கடந்த 2009-ல் மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் 10 ஆண்டுகால அனுமதி வழங்கியது. இந்த அனுமதி 2019-ல் காலாவதியாகும் நிலையில் இருந்தது. 2018 நிலவரப்படி அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி ரூ.703 கோடி செலவில், 17 சதவீதம் மட்டுமே முடிவடைந்திருந்தது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் 4 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிடுமாறு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு 2018-ல் டான்ஜெட்கோ கடிதம் எழுதி இருந்தது.
இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்காமல், 2019 டிசம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டித்து வழங்கியுள்ளது. விரிவாக்கப் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியாததால், அது பல முறை நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பது, 2006-ல் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கு எதிரானது. எனவே, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் 2 மாதத்திற்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி மத்தியச் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறுவதற்காக அனுப்பி வைக்கவும் 6 மாதத்துக்குள் மீண்டும் அனுமதியை பெறவும் உத்தரவிட்டது. இதர சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை டான்ஜெட்கோ ஆய்வுசெய்து, அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றையெல்லாம் பரிசீலித்து, உரிய கட்டுப்பாடுகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil