கோவை உக்கடம் பகுதி அருகே 2022 அக்டோபர் 23ஆம் தேதி கார் வெடிப்பு நடந்தது. முதலில் இது விபத்தாக பார்க்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின்னர் இதில் பயங்கரவாத சதி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு அளிக்கப்பட்டது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ, தமிழ்நாடு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையானது தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் நடந்தது.
மேலும், ஓட்டேரி எஸ்.எஸ் புரம், வேப்பேரி நெடுஞ்சாலை, ஏழு கிணறு, முத்தியால்பேட்டை ஆகிய இடங்களிலுல் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக கோவையில் நடந்த சோதனையின் போது, கோவை கார் வெடிப்பில் கொல்லப்பட்ட ஜமேஷா முபினுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கண்டறியப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் முகம்மது தவ்ஃபீக் (25), உமர் பரூக் (39), பெரோஸ் கான் (28) ஆகியோர் ஆவார்கள். இவர்கள் மூவரும் முறையே கோயம்புத்தூர், குன்னூர் மற்றும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/