தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ.( தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள், கோவை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
5 அதிகாரிகள் கொண்ட குழு, கோவையின் லாரிப்பேட்டையில் உள்ள செளரிதீன் மற்றும் ஜி.எம் நகர் பகுதியில் உள்ள நிஷார் என்பவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொச்சி டிஎஸ்பி தலைமையிலான 10 அதிகாரிகள் கொண்ட குழு, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள மியாண்டட் நகரில் உள்ள ஒரு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு, அவர்களுக்கு தேவையான நிதியுதவி செய்தல், அவர்கள் செயல்பாடுகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்புடையவர்களாக கருதப்படும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சமீபகாலமாக சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம், அன்சாருல்லா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தமிழகத்தின் 14 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியிருந்தது.
தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, கோவையின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி சோதனை மற்றும் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.