நீலகிரியில் ஒரு அரசுப் பள்ளிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் மாணவிகள் புகார் கூறியதையடுத்து, அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது, உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காவல்துரையினரின் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு முடிந்ததும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் போலீசாரிடம், பள்ளியின் அறிவியல் ஆசிரிர் செந்தில்குமார் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இவர் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது.
போலீசாரிடம் அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர்.
மாணவிகள் புகாரைக் கேட்டு அதிர்ச்சியான போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து ஆசிரியர் செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், கோத்தகிரியைச் சேர்ந்த செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் தான் இந்த அரசு பள்ளிக்கு மாறுதலாகி வந்திருக்கிறார். 6 முதல் 8 -ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தி வந்த இவர், மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகளை முத்தமிடுதல், தவறான தொடுதல் என 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
ஆசிரியர் செந்தில் குமாரின் பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க முயற்சி செய்வதை அறிந்த செந்தில் குமார், அந்த மாணவிகளை மிரட்டி வெளியே சொல்ல விடாமல் தடுத்துள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவிகள் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து கைதாகியிருக்கும் செந்தில் குமார் இதற்கு முன் பணியாற்றிய மற்ற பள்ளிகளும் விசாரணை நடத்தவும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.