நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 240585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், குன்னூர் (தனி), கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி), கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி.
மூன்று தனி சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள நீலகிரி மக்களவைத் தொகுதி, 2009 முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தனித் தொகுதியாக உள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிக முறை வென்றுள்ளனர்.
இந்த முறை நீலகிரியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
தேர்தல் வரலாறு
1990கள் வரை காங்கிரஸ் பலம் வாய்ந்த தொகுதியாக நீலகிரி இருந்தது, இங்கு ஏழு முறை அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.
1967-ல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வென்றிருக்கின்றன. இரு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸின் ஆர்.பிரபு 5 முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.ராசா, தனி தொகுதியாக இருந்தவரை சொந்த தொகுதியிலேயே போட்டியிட்டு வந்தார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு பெரம்பலூர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.
எனவே, பொது தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 தேர்தலில் 2-வது முறையாக நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா தோல்வி அடைந்தார். அறிமுகமே அல்லாத அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2ஜி வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தது அதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் திமுகவின் ஆர். ராசா மீண்டும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கினார். இதில், அதிமுகவின் தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றார்.
ஆ.ராசா 5, 47,832 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 3,42,009 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் என்.தியாகராஜன் 41,169 வாக்குகளும் பெற்றனர்.
சட்டமன்ற தேர்தல் 2021
2021 சட்டமன்ற தேர்தலில் உதகையில் காங்கிரஸ் கட்சியின் ஆர்.கணேஷ், குன்னூரில் திமுகவின் கா.ராமச்சந்திரன், கூடலூரில் அதிமுகவின் பொன்.ஜெயசீலன், மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.செல்வராஜ், அவினாசியில் முன்னாள் சபாநாயகரான அதிமுகவின் தனபால், பவானிசாகரில் அதிமுகவின் பண்ணாரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வாக்காளர் விவரம்
நீலகிரி தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை (2024)
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,18,915
ஆண் வாக்காளர்கள்: 6,83,021
பெண் வாக்காளர்கள்: 7,35,797
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 97
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்
1. ஆ.ராசா (திமுக)
2. லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக)
3. எல்.முருகன் (பாஜக)
4. ஜெயக்குமார் (நாம் தமிழர்)
இவர்களுடன் மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் 2024
ஆ.ராசா- 473212
எல். முருகன்-232627
லோகேஷ் தமிழ்ச்செல்வன்- 220230
ஜெயக்குமார்- 58821
இதன்மூலம் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 240585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மொத்தம் பதிவாகிய 10,16,318 வாக்குகளில் 46.45 சதவீத வாக்குகள் பெற்றார்.
ஆ.ராசா கடந்த 2019 தோ்தலில் 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தோ்தலில் அதைவிட கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நீலகிரி தொகுதி வரலாற்றில் இதுவே அதிகபட்ச வாக்கு வித்தியாசமாகும்.
இந்த வெற்றியின் மூலம் நீலகிரி தொகுதியில் மூன்றாவது முறையாக எம்.பியாக தேர்வாகிறார் ஆ. ராசா.