நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே 50க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் உயிரிழந்தது ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால்தான் என மாவட்ட ஆட்சியர் எஸ்பி அம்ரித் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களில் சில காட்டுப்பன்றிகள் இறந்து கிடந்தன.
இந்த பன்றிகளின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியன் கால்நடை ஆராய்ச்சி இன்ஸ்டியூட்டுக்கு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின் முடிவின் அந்த இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இந்த காய்ச்சல் மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு நோய் பரவாது.
இந்த நோய் குறித்து மேலும் ஆய்வு செய்ய சென்னையில் இருந்து சிறப்புக் குழு நீலகிரிக்கு வரவுள்ளனர். மேலும் வேட்டைத் தடுப்புப் பிரிவினர் பன்றிகளின் சடலங்களை சேகரித்து எரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப் பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை அருகே முதுமலை வனப் பகுதி உள்ளது.
இதனால் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களின் ஆட்சியா்கள், மருத்துவ அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், நீலகிரியில் பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பன்றிகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் பன்றி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அம்ரித் எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“