கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து கூடுதல் தகவல்களை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்பணை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பி. ரூபன்குமார், ம. திருப்பாதிரிபுலியூர் ஆய்வாளர் சந்திரன், உதவி ஆய்வாளர்கள் கதிரவன், கணபதி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் எம். புதூர் காசநோய் மருத்துவமனை அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சந்தேகத்திற்கு இடமான 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, சிவாஜி (எ) சிவாஜி கணேசன், சந்துரு (எ) சந்திரசேகர், ஆனந்த், சூர்யா (எ) விஜய், எலி (எ) விக்னேஷ், தோல் (எ) சூர்ய பிரதாப், அரி (எ) அரவிந்த், குண்டுபாலா (எ) ஆகாஷ் மற்றும் கார்த்தி (எ) கார்த்திகேயன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனால் அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 23 கிலோ எடை கொண்ட கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்தார்.
செய்தி - பாபு ராஜேந்திரன்