/indian-express-tamil/media/media_files/G8GMKcjyKDZx2De4BDKr.jpg)
கைதான வாலிபர் காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது .
திருச்சியில் 9 வயது சிறுமி இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்ற நிலையில், அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அங்கும் இங்கும் தேடி அழைத்தார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் பக்கத்து ஏரியாவில் காயத்துடன் நின்று கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார். உடனடியாக அவர் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அந்த சிறுமியை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பேச்சுக் கொடுத்தவாறு பஸ்சில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, பின்னர், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் விடிய விடிய பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
சிறுமி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் அவரது பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுமியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான நபரை உடனடியாக பிடிக்குமாறு உத்தரவிட்ட காவல் ஆணையர் காமினி, அதற்காக தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருக்கும் பல்வேறு சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்த சின்னராஜா(25) என்பது தெரிய வந்தது.
பின்னர், காவல்துறையினர் அந்த நபரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது அவர் சிதம்பரத்தில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில், திருச்சி தனிப்படையினர், தலைமறைவான சின்ன ராஜா என்ற வாலிபரை சிதம்பரத்தில் நேற்று கைது செய்துள்ளனர்.
அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது . உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்ன ராஜா மீது காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.