மாணவிகளைத் தவறான வழியில் உபயோகிக்க முயற்சித்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைதாகினார். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வழக்கின் விசாரணையை நாளை அருப்புக்கோட்டையில் துவங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் கணக்கு பேராசிரியை நிர்மலா தேவி. இவர் சமீபத்தில் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளம் முழுவது பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவியை அருப்புக்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். நிர்மலாவின் இரண்டு தொலைப்பேசிகளையும் ஆய்வு செய்ததில், சில முக்கிய பிரமுகர்களில் தொடர்பு எண் உள்ளதென்றும், அவர்களிடம் நிர்மலா உரையாடியுள்ளார் என்றும் தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றினார்கள்.
மேலும் இவ்விவகாரத்தில் கவர்னரின் பெயர் ஈடுபட்டுள்ளதால், இது குறித்து விளக்கம் அளிக்க நேற்று செய்தியாளர்களை கவர்னர் சந்தித்தார். அப்போது, “கல்லூரி நிகழ்ச்சிகளில் பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள் அல்ல. நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. அவரை நான் இதுவரை பார்த்ததும் இல்லை.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க கவர்னரின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையை நாளை முதல் நடத்த உள்ளார். இதன் முதற்கட்டமாக அருப்புக்கோட்டையிலேயே இந்த விசாரணை துவங்குகிறது. இந்த வழக்கு குறித்து நாளைத் தனது விசாரணையை, தேவாங்க கல்லூரியில் துவங்கி பல்வேறு கோணங்களில் விசாரிக்க உள்ளார். இந்த விசாரணையின் போது, இவ்வழக்கு குறித்து யாரேனும் எதாவது தெரிவிக்க நினைத்தால் சந்தானத்தை சந்தித்துத் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களைத் தெரிவிப்பவர்கள் பெயரும் விவரமும் ரகசியம் காக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த விசாரணையின் தொடர்பான முழு அறிக்கையையும், இம்மாதம் 30ம் தேதிக்குள் சந்தானம் சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது