பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், தனது அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று சமர்ப்பித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். ஒரு நபர் குழுவான அதன் தலைவர் சந்தானம் விசாரணைகளை நடத்தி முடித்துவிட்டு வரும் 15-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறியிருந்தார்.
இதற்கிடையே, நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிட கூடாது என்று கணேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உத்தரவிட்டது. மேலும் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையை முடித்து ஆளுநரிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற அதிகாரி சந்தானம், தனது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று சமர்ப்பித்தார்.